கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம்!

 
dead

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறி அவரது தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள மேற்கு உடையார்பாளையத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவரது மகள் மௌலி தேவி(38). வழக்கறிஞரான இவருக்கு, கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்குறிச்சியை சேர்ந்த அன்பரசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக கணவன் - மனைவி இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால்,  மகள்கள் இருவரும் ஆத்தூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தனர். 

kallakurichi ttn

இந்த நிலையில், மூத்த மகளான ஹரினி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது தந்தையிடம் சென்று வசித்து வந்தார். மேலும், அவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை கழிவறையில் வழுக்கி விழுந்து ஹரினி உயிரிழந்ததாக கூறி மௌலிதேவிக்கு உறவினர்கள் போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மௌலிதேவி, தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஹரினி கழிவறைக்கு சென்றபோது வலிப்பு நோய் ஏற்பட்டு வழுக்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.