மதுரை அருகே பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை மர்ம மரணம் - பெற்றோர் தலைமறைவு!
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பிறந்து சில நாட்களே ஆன குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பெரியகட்டளை கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. கூலி தொழிலாளி. இவரது மனைவி கவுசல்யா. இவர்களுக்கு 4 வயது மற்றும் 2 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், மீண்டும் கர்ப்பமடைந்த கவுசல்யாவுக்கு, கடந்த 21ஆம் தேதி சேடப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது.
இதனை தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்ற நிலையில், நேற்று முன்தினம் இரவு குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறி, உடலை வீட்டின் முன்பு புதைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகட்டளை கிராம நிர்வாக அலுவலர் முனியாண்டி, குழந்தையின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி, சேடப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதனை அறிந்த குழந்தை பெற்றோர் முத்துப்பாண்டி - கவுசல்யா ஆகியோர் தலைமறைவாகினர். இதனால், 3-வது பெண் குழந்தையாக பிறந்ததால் அதனை அவர்கள் கொலை செய்து உடலை புதைத்தனரா? என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், மாயமான தம்பதியினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.