பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கு நேரில் தீபாவளி வாழ்த்து கூறிய நெல்லை எஸ்.பி

 
nellai

நெல்லை மாவட்டத்தில் தீபாவளியை ஒட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு, மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் நேரில் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்த சம்பவம் காவலர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்புடுத்தி உள்ளது.

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில், காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில், அனைத்து காவல் நிலையங்களில் உள்ள முக்கிய பகுதிகளிலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி காவலர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். 

nellai

இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேற்று முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முன்னீர்பள்ளம், மருதம் நகர், கோபாலசமுத்திரம், பிராஞ்சேரி, மேலச்செவல், செங்குளம், சுத்தமல்லி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் காவலர்களுக்கு நேரில் சென்று இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு, அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

பின்னர் பொதுமக்களுக்கும், சிறுவர், சிறுமியருக்கும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று காவலர்களிடம் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்கள் கூறியது காவலர்கள் மத்தியில் மகிழ்ச்சியான தீபாவளியாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியில், சேரன்மகாதேவி உட்கோட்ட டிஎஸ்பி பார்த்திபன், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.