மேட்டூர் அருகே சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து: 8 பயணிகள் காயம்!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சாலையில் சென்ற ஆம்னி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததில், 8 பயணிகள் தீக்காயமடைந்தனர்.
கோவையில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று 43 பயணிகளுடன் மேட்டூர் வழியாக பெங்களுரு நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 1 மணி அளவில் மேட்டூர் அருகே உள்ள சாம்பள்ளி என்ற இடத்தில் சென்றபோது பேருந்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியாகி உள்ளது. இதனை கவனித்த பேருந்து ஓட்டுனர் உடனடியாக சாலையில் பேருந்தை நிறுத்தி விட்டு, பயணிகளை கீழே இறங்கும்படி அறிவுறுத்தினர். அதற்குள்ளாக பேருந்தில் தீ பற்றி மளமளவென மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியது. பேருந்தில் தீ பரவியதால் பயணிகள் அலறியடித்தபடி கீழே இறங்கினர். அப்போது 8 பேருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.
மற்றவர்கள் காயமின்றி தப்பினர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த கருமலைக்கூடல் போலீசார் மற்றும் மேட்டூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்க முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் ஆம்னி பேருந்து முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.