தொழில்போட்டி - இளைஞரால் தாக்கப்பட்ட வளையல் கடை உரிமையாளர் பலி!

 
dead

ஓமலூரில் தொழில்போட்டியால் ஏற்பட்ட தகராறில் இளைஞரால் தாக்கப்பட்ட வளையல் கடை உரிமையாளர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் கள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் ஓமலூர் பேருந்து நிலையம் பகுதியில் வளையல் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது கடையின் அருகே ஆட்டுக்காரனூர் பகுதியை சேர்ந்த சுகுணா, அவரது மகன் சந்தோஷ் கதிர்வேல்(27) ஆகியோர் வளையல் கடை நடத்தி வந்தனர். இவர்களுக்குள் கடை நடத்துவது தொடர்பாக தொழில்போட்டி இருந்து வந்துள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

salem

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சந்தோஷ் கதிர்வேல் கடையை அடைத்தபோது, அவரது கடையின் முன்பு சுப்பிரமணி சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதனை சந்தோஷ் கதிர்வேல் தட்டிக்கேட்டதால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் காயமடைந்த சுப்பிரமணி, புகார் அளிக்க ஓமலூர் காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது, அவர் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். 

உறவினர்கள் அவரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், நேற்று காலை சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணியின் மனைவி அளித்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிந்து, சந்தோஷ் கதிர்வேல், அவரது தாய் சுகுணா ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.