பெருந்துறை பழைய பஸ் நிலைய சாலை பணியில் குளறுபடி.. எம்எல்ஏ ஜெயக்குமாரிடம் பொதுமக்கள் சரமாரி புகார்!

 
பெருந்துறை

பெருந்துறை பழைய பேருந்து நிலைய சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கும்படி அதிமுக எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமாரிடம், அந்த பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பழைய பேருந்து நிலையப் பாதை முல்லை நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று பெருந்துறை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பெருந்துறை தொகுதி எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 

பெருந்துறை

கூட்டத்தில், பெருந்துறை பழைய பேருந்து நிலைய சாலை கடந்த 1 வருடமாக தார்ச்சாலை பணி முடிக்காமலும், சாலையோரத்தில் அமைக்கப்பட்டு வரும் வடிகால் பணி முழுமை பெறாமலும் உள்ளதால் பொதுமக்கள் அது குறித்து ஏராளமான புகார்களை தெரிவித்தனர். இதனைக் கேட்டறிந்த எம்எல்ஏ ஜெயக்குமார், அடுத்த 1 வாரத்தில் நெடுஞ்சாலை, மின்வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், பேரூராட்சி துறை அதிகாரிகளையும் நேரில் அழைத்து ஆய்வுக்கூட்டம், நடத்தி உடனடியாக குறைகள் களையப்படும் என தெரிவித்துக் கொண்டார். 

இந்த கூட்டத்தில் பெருந்துறை பேரூராட்சி அதிமுக செயலாளர் கல்யாணசுந்தரம், கருமாண்டி செல்லிபாளையம் பேரூர் செயலாளர் கே.எம். பழனிசாமி, பெருந்துறை ஒன்றிய செயலாளர் விஜயன் என்ற ராமசாமி, அவைத்தலைவர் சந்திரசேகரன், மாவட்ட இலக்கிய அணி அருள்ஜோதி செல்வராஜ் உள்ளிட்ட  நிர்வாகிகள் மற்றும் பெருந்துறை பேரூராட்சி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.