ஓமலூர் அருகே ஏரியில் மூழ்கி பிளஸ் 1 மாணவர் பலி... நீச்சல் பழகியபோது சோகம்!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஏரியில் நீச்சல் பழகிய பிளஸ் 1 மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவபிரகாசம். இவரது மகன் திருநாவுக்கரசு(16). இவர் கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பதால் வீட்டில் இருந்து வந்த திருநாவுக்கரசு, நேற்று நண்பர்களுடன் பண்ணப்பட்டியில் உள்ள ஏரியில் நீச்சல் பழக சென்றார்.
அப்போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற திருநாவுக்கரசு தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்ட மற்ற சிறுவர்கள் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று ஏரியில் தேடினர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. தகவலின் பேரில் காடையாம்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏரியில் தேடினர்.
அப்போது, திருநாவுக்கரசு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, தீவட்டிப்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசாதனை ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை சிவபிரகாசம் அளித்த புகாரின் பேரில் தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.