பாலக்கோடு அருகே அணையில் தவறி விழுந்து பிளஸ் 2 மாணவி பலி... செல்பி மோகத்தால் நிகழ்ந்த விபரீதம்!
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே செல்பி எடுக்க முயன்றபோது அணையில் தவறி விழுந்த பிளஸ் 2 மாணவி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கோவிந்தப்பட்டி அருகே உள்ள காரியப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மகள் சௌந்தர்யா(17). இவர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா விடுமுறை காரணமாக வீட்டில் இருந்து வந்த மாணவி சௌந்தர்யா, கடந்த சில நாட்களுக்கு முன்பு தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பெல்ராம்பட்டியில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு வந்திருந்தார்.
தொடர்ந்து, நேற்று தனது உறவினர்களுடன் கேசர்குளி அணைக்கு சென்றிருந்தார். அப்போது, அணையின் கரை மீது ஏறி நின்று தனது போனில் செல்பி எடுக்க முயற்சித்தார். அப்போது, சௌந்தர்யா எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி அணையில் உள்ள தண்ணீரில் விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் அணையில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர தேடலுக்கு பின் மாணவி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மாரண்டஅள்ளி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.