வேலூரில் தேர்தல் முன்விரோதத்தில் பாமக பிரமுகர் அடித்துக்கொலை!
வேலூரில் மாநகராட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக பாமக பிரமுகரை அடித்துக்கொன்ற முன்னாள் பாமக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் சித்தேரி பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் பிரகாஷ்(26). இவர் பாமக-வில் மண்டல செயலாளாராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(45). பாமக பிரமுகரான இவரும், பிரகாஷும் கடந்த மாநகராட்சி தேர்தலில் போட்டியிட கட்சியில் விண்ணப்பத்திருந்த நிலையில், பிரகாஷுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனால் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்த ராமகிருஷ்ணன், கடந்த 6 மாதங்களுக்கு முன் பாமகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளளார். மேலும், தேர்தல் தொடர்பாக இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று மாலை பிரகாஷ் தொரப்பாடியில் இருந்து இருசக்கர வாகனத்தில் சித்தேரிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பெரியார் நகர் பகுதியில் நின்றிருந்த ராமகிருஷ்ணனுக்கும், பிரகாஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து பிரகாஷை சரமாரியாக தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து, ராமகிருஷ்ணன் அங்கிருந்து தப்பியோடினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாகாயம் போலீசார், பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளி ராமகிருஷ்ணனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மாநகராட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக பாமக பிரமுகர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.