அரியலூரில் பிப்.24-இல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 24ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 2ஆம், 3ஆம், 4ஆம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தற்போது வரும் 24ஆம் தேதி அன்று அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறவுள்ள சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் 700-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான ஆட்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர்.

மேலும், வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் பயன்பெறும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே, இம்முகாமில் கலந்து கொள்வதற்கு 18 வயது முதல் 35 வயது வரையிலான ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இம்முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும், விவரங்களுக்கு 04329 - 228641, 9499055914 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பினை அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆட்சியர் ரமண சரஸ்வதி கேட்டுக்கொண்டுள்ளார்.


