நெல்லையில் போலி ஆவணம் மூலம் விற்கப்பட்ட 22 செண்ட் நிலம் மீட்பு!

 
tvl

நெல்லை பாளையங்கோட்டையில் போலி ஆவணம் முலம் விற்பனை செய்த 22 செண்ட் நிலத்தை, நில அபகரிப்பு பிரிவு போலீசார் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

நெல்லை பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டை சாலை தெருவை சேர்ந்த பிரான்சிஸ் பாஸ்கர். இவருக்கு நடுவக்குறிச்சி பகுதியில் ரூ.33 லட்சம் மதிப்புள்ள 22 செண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணம் மூலம் வேறோருவர் பெயரில் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, தனது நிலத்தினை மீட்டுத்தருமாறு பிரான்சிஸ் பாஸ்கர், நெல்லை மாவட்ட எஸ்பி சரவணனிடம் மனு அளித்தார். அவர் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு  பிரிவு டிஎஸ்பி ஜெயபால் பர்னபாசுக்கு உத்தரவிட்டார்.

nellai

அதன் பேரில், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மீராள்பானு தலைமையிலான, உதவி ஆய்வாளர் தனலெட்சுமி, தலைமை காவலர் நாகராஜன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு 1 மாத காலத்திற்குள்  நிலத்தை மீட்டு, அதற்கான ஆவணத்தை மாவட்ட எஸ்பி சரவணன், நில உரிமையாளர் பிரான்சிஸ் பாஸ்கரிடம் நேற்று, மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

இந்த வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு நிலத்தினை மனு அளித்து ஒரு மாதத்திற்குள் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்த, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசாருக்கு, எஸ்.பி. சரவணன் பாராட்டு தெரிவித்தார்.