கோவையில் தொழிலதிபர் வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளை - மர்மநபர்கள் கைவரிசை!

 
robbery

கோவை பீளமேடு அருகே தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை பீளமேடு அருகே விளாங்குறிச்சி சாலை குமுதம் நகரில் வசித்து வருபவர் மாயக்கண்ணன். தொழிலதிபர். இவரது மனைவி செல்வநாயகி(55). இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தம்பதியினர் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு தொண்டாமுத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அறிந்த மர்மநபர்கள், மாயக்கண்ணன் வீட்டின் முதல் மாடியில் உள்ள கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் வைத்திருந்த 40 பவுன் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். 

peelamedu

இந்த நிலையில், மாயக்கண்ணன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து, செல்வநாயகிக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், செல்வநாயகி வீட்டிற்கு சென்று பார்த்தபோது மர்மநபர்கள் பீரோவில் இருந்த நகை, பணம் உள்ளிட்டவை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.