பெரம்பலூர் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பலி!
பெரம்பலூர் அருகே மின்சாரம் தாக்கி 5ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். விவசாயி. இவரது மகன் கவியரசன். இவர் கிளியூரில் உள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி திறக்காததால் வீட்டில் இருந்து வந்த கவியரசன், நேற்று தனது பக்கத்து வீட்டிற்கு சென்ற மின்சார ஒயருக்கு பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட இரும்பு கம்பியை பிடித்து விளையாடி கொண்டிருந்துள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த குன்னம் போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தந்தை செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.