வேலூர் தனியார் மருத்துவமனை விடுதியில் மாணவர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை!

 
dead

வேலூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விடுதியில் எம்பிபிஎஸ் இறுதியாண்டு படிக்கும் மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை கே.கே.நகரை சேர்ந்தவர் ஜோஸ்வா(23). இவர் வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்து வந்தார். இதற்காக மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலை அவரது விடுதி அறை நீண்டநேரமாக பூட்டியிருந்ததால் சந்தேகமடைந்த சக மாணவர்கள் அறையை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, ஜோஸ்வா உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார்.

vellore

இதனால் அதிர்ச்சியடைந்த விடுதி நிர்வாகிகள் வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், விடுதி அறைகளில் எலித் தொல்லை காரணமாக மருந்து தெளிக்கப்பட்டதாகவும், இதனால்  2 நாட்களுக்கு விடுதியில் யாரும் தங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்ட போதும், அறையில் தங்கிய  ஜோஸ்வா மருந்து நொடியால் உயிரிழந்திருக்க கூடும் என தெரியவந்துள்ளது. எனினும் அவர் எலி மருந்து அடித்ததால் உயிரிழந்தாரா? அல்லது அவரது இறப்புக்கு வேறு காரணம் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.