மயிலாடுதுறை அருகே திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; ஆர்.டி.ஓ விசாரணை!
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து, சீர்காழி கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே உள்ள குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணன். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சந்தியா (28) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் சந்தியா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று வீட்டில் தனியாக இருந்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிராம மக்கள் திருவெண்காடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சந்தியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருவெண்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணமாகி 2 மாதங்களில் சந்தியா தற்கொலை செய்து கொண்டுள்ளதால், வரதட்சணை கொடுமை காரணமா? என சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.