பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த டெய்லர் போக்சோவில் கைது!
திண்டுக்கல்லை சேர்ந்த பிளஸ் 1 மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த டெய்லரை, கரூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவிக்கு பாளையம் பகுதியில் உள்ள கடையில் டெய்லராக பணிபுரிந்த கரூர் மாவட்டம் கந்தசாரப்பட்டியை சேர்ந்த மாணிக்கசுந்தரம்(20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இது நாளடைவில் காதலாக மாறிய நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த மாதம் மாணிக்கசுந்தரம் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார. பின்னர் அவர் கரூருக்கு திரும்பிய நிலையில், மாணவியுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மாணவி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து, அவர்கள் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணிக்க சுந்தரம் மீது புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணிக்கசுந்தரத்தை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.