குடும்ப தகராறில் இளம்பெண் வெட்டி படுகொலை - கணவர் வெறிச்செயல்!
நாமக்கல் அருகே காதல் மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்ற மரம்வெட்டும் தொழிலாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்த நவணி பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முள்ளம்பட்டியில் மாற்று சமூகத்தை சேர்ந்த நந்தினி(22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் பிரனேஷ் என்ற மகன் உள்ளான். இந்த நிலையில், நந்தினிக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனை தமிழ்செல்வன் கண்டித்ததால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று அதிகாலை நந்தினி, தனது ஆண் நண்பருடன் பேசி கொண்டிருப்பதை தமிழ்செல்வன் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தமிழ்செல்வன், வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து நந்தினியை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த நந்தினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து, தமிழ்செல்வன் அங்கிருந்து தப்பியோடினார்.
தகவலின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து நந்தினியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய தமிழ்செல்வனை தீவிரமாக தேடி வருகின்றனர்.