புவனகிரி அருகே விவசாயி டிராக்டர் ஏற்றி படுகொலை!
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த விவசாயி மீது டிராக்டர் ஏற்றி படுகொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சக்திவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். விவசாயி. இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், ராமதாஸ் நேற்றிரவு வீட்டின் அருகே நண்பர்களுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது, ஸ்ரீதர் திடீரென டிராக்டரை ஓட்டிச்சென்று ராமதாஸ் மீது மோதினார்.
இதில் பலத்த காயமடைந்த ராமதாஸை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராமதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த புவனகிரி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு.ப்பதிவு செய்து, தப்பியோடிய கொலையாளி ஸ்ரீதரை தீவிரமாக தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக விவசாயி டிராக்டர் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சக்திவிளாகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.