மூத்த மகள் இறந்ததால் விரக்தி... இளைய மகளுடன் உயிரை மாய்த்த தாய்!

 
dead

கிருஷ்ணகிரி அருகே மூத்த மகள் உயிரிழந்ததால் வேதனையில் தாயும், இளைய மகளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அரசகுப்பம் ஊராட்சி கொரட்டகிரி கிராமத்தை சேர்ந்தவர்கள் ரவி - கங்கம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு ராணி(17), மோனிஷா (7) என 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணியை, அவரது தாய் கங்கம்மாள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ராணி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். மகள் உயிரிழந்ததால் கங்கம்மாள் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். 

krishnagiri

இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மோனிஷாவுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்ட நிலையில், கங்கம்மாள் ஓசூர் அரசு மருத்துவமனையிலும், மகள் மோனிஷா தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அன்றிரவு இருவரும் உயிரிழந்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார், மங்கம்மாள், மோனிஷா ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ரவி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூத்த மகள் தற்கொலை செய்துகொண்டதால், வேதனையில் தாய், இளைய மகள் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.