காப்புக்காட்டில் சடலமாக கிடந்த இறைச்சி கடை உரிமையாளர்... திருச்சி அருகே பரபரப்பு!
திருச்சி மாவட்டம் புலிவலம் அருகே காப்புக்காட்டில், சேலத்தை சேர்ந்த இறைச்சிக்கடை உரிமையாளர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் புலிவலத்தில் இருந்து ஓமாந்தூர் செல்லும் சாலையில் உள்ள காப்புகாட்டில் நேற்று அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் சடலமாக கிடந்தார். அந்த பகுதிக்கு ஆடு மேய்க்க சென்ற பொதுமக்கள் இதுகுறித்து புலிவலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் புலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர் சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியை சேர்ந்த மொய்தீன்ஷா(54) என்பதும், அவர் அந்த பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து, அவர் இங்கு எதற்காக வந்தார் என்றும், யாரேனும் கொலை செய்து சடலத்தை காப்புக்காட்டில் வீசி சென்றனரா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காப்புக்காட்டில் ஆண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் புலிவலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.