ஒகேனக்கல் காவரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

 
hogenakkal


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதை அடுத்து, அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, அந்த மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளன. இதனால், பாதுகாப்பு கருதி கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகளில் இருந்து நேற்று வரை வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், தமிழக காவிரி கரையோரங்களிலும், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட மலைப்பகுதியை சேர்ந்த இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகாரித்து தற்போது வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக உள்ளது.

ஒகேனக்கல்

இதனால் ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் தமிழக - கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதனிடையே, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளதால் அங்கு வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது.