கணவரை பிரிந்த மகளை கண்டித்ததால் ஆத்திரம்... கணவரின் கழுத்தை அறுத்துக்கொன்ற மனைவி!
கிருஷ்ணகிரி அருகே தூங்கிக் கொண்டிருந்த கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி, காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வசித்து வருபவர் மாதேஷ் (40). கட்டிட சூப்பர்வைசர். இவருக்கு மலர் (37) என்ற மனைவியும், ரத்தினவேல், சத்யா என 2 பிள்ளைகளும் உள்ளனர். சத்யா, தனது அத்தை மகனை திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக தந்தை வீட்டிற்கு வந்துள்ளார்.
மகளின் செயலை விரும்பாத மாதேஷ், சத்யாவை கண்டித்து கணவர் வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதனால், மாதேஷுக்கும், அவரது மனைவி மலருக்கும் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து, மாதேஷ் தனது அறைக்கு சென்று படுத்து தூங்கி கொண்டிருந்தார். கணவர் மீது ஆத்திரம் தீராத மலர், வீட்டில் இருந்து கத்தியை எடுத்து, தூங்கிக் கொண்டிருந்த மாதேஷின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
தொடர்ந்து, அவர் கத்தியுடன் பர்கூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர் அளித்த தகவலின் பேரில், போலீசார் வீட்டிற்கு சென்று மாதேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.