குடித்துவிட்டு தகராறு செய்த கணவர் கழுத்தை நெரித்துக்கொலை - மனைவி வெறிச்செயல்!
தூத்துக்குடியில் குடித்துவிட்டு தகராறு செய்த கணவரை கழுத்தை நெரித்துக்கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் முதலாவது தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம்(46). கூலி தொழிலாளி. இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில், ஆறுமுகத்திற்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால், நாள்தோறும் வேலைக்கு செல்லும் பணத்தில் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஆறுமுகம், மனைவி சுப்புலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்கி உள்ளார்.
அப்போது, ஆத்திரமடைந்த சுப்புலட்சுமி, துணியால் கணவர் ஆறுமுகத்தின் கழுத்தை நெரித்தார். அதில், அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தெரிவித்த தகவலின் பேரில் தாளமுத்து நகர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சுப்புலட்சுமியை கைதுசெய்தனர். மதுபோதையில் தகராறு செய்த கணவரை மனைவி கழுத்தை நெரித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.