ஆலங்குடி அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி... பெண் உள்பட இருவர் படுகாயம்!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும், பெண் உள்பட இருவர் பலத்த காயமடைந்தனர்.
புதுக்கோட்டை அருகே உள்ள வயலோகம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் பாலசுப்பிரமணியன்(13). ஆலங்குடி அருகே கல்லாங்குடியில் உள்ள நடராஜனின் உறவினர் ஆறுமுகம் என்பவர் இறந்ததால், அவரது துக்க நிகழ்ச்சிக்கு நடராஜன் குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது, கல்லாங்குடி இந்திரா நகரில் உள்ள உறவினர் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டிற்கு குளிப்பதற்காக பாலசுப்பிரமணியம் சென்றிருந்தார். அங்குள்ள சுவிட்சை தொட்டபோது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை கண்ட கிருஷ்ணமூர்த்தியின் மகள் ஜான்சி(21), மகன் லெனின்(24) ஆகியோர் அவரை காப்பாற்ற முயன்றனர். அப்போது, அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக மின்சார இணைப்பை துண்டித்து, 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாலசுப்பிரமணியை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெவித்தனர். ஜான்சி, லெனின் ஆகியோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி போலீசார், பாலசுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.