முசிறி காவல் நிலையத்திற்கு மத்திய உள்துறை அமைச்சக விருது... காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டு!

 
musiri

தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் மத்திய உள்துறை அமைச்சகத்தால் சிறந்த காவல் நிலையமாக முசிறி காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், முசிறி போலீசாருக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

திருச்சி மாவட்டம் முசிறியில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட குழுவினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது காவல் நிலைய சுகாதாரம், பராமரிப்பு மற்றும் வரப்பெற்ற புகார்களின் மீது விரைந்து நடவடிக்கை, நீதிமன்றத்தில் வழக்குகளை விரைவாக முடித்தல் மற்றும் புகார் கொடுக்க வருபவர்களிடம் மேற்கொள்ளப்படும் அணுகுமுறை மற்றும் இக்காவல் நிலையம் மீது பொதுமக்கள் மத்தியில் உள்ள நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதி சான்றிதழுக்கு பரிந்துரை செய்திருந்தது.

musiri

அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையமாக முசிறி காவல் நிலையத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வு செய்து, அதற்கான சான்றிதழை சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு ஒன்றிய அரசு அனுப்பி வைத்திருந்தது. விருதுக்கான சான்றிதழை முசிறி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் நாகராஜ், தலைமை காவலர் மகாமணி ஆகியோர் சென்னைக்கு நேரில் சென்று பெற்றுக்கொண்டனர். பின்னர் டிஜிபி சைலேந்திரபாபுவிடம் நேரில் காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி சங்கர் உடனிருந்தார்.

musiri

இதனை தொடர்ந்து, திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், டிஐஜி சரவணசுந்தர், திருச்சி மாவட்ட எஸ்பி சுர்ஜித்குமார் மற்றும் முறிசி டிஎஸ்பி யாஸ்மின் ஆகியோர், முசிறி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.