வாட்ஸ்அப்பில் வீடியோ பதிவிட்டு தலையாரி தற்கொலை... திருச்சுழி அருகே சோகம்!

 
suicide

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே குடும்ப தகராறில் தலையாரி வாட்ஸ்அப்பில் வீடியே பதிவு வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அடுத்துள்ள பள்ளிமடத்தை சேர்ந்தவர் விநாயகசுந்தரம் (41). இவர் முத்தனேரி கிராமத்தில் தலையாரியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி லீலாவதி என்ற மனைவி உள்ளார். இதனிடையே, பள்ளிமடம் பகுதியை சேர்ந்த சிலரால், விநாயகசுந்தரம் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், விநாயகசுந்தரம், தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக கூறி, நண்பர்களுக்கு வாட்ஸ்ஆப்பில் வீடியோ அனுப்பிவிட்டு, கடந்த சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

suicide

இதனால் அதிர்ச்சியடைந்த விநாயகசுந்தரத்தின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல், நேற்று உடலை அடக்கம் செய்ய முயன்றனர். தகவலறிந்த திருச்சுழி போலீசார் விரைந்து சென்று, விநாயகசுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி லீலாவதி அளித்த புகாரின் பேரில் திருச்சுழி  போலீசார் வழக்குப்பதிவு செய்து, விநாயகசுந்தரம் வெளியிட்ட வீடியோ பதிவை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ளவர்கள் அவதூறாக பேசியதால் கிராம தலையாரி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.