குடும்ப தகராறில் தம்பியை பாட்டிலால் குத்திக்கொன்ற அண்ணன் கைது!

 
Murder

நாகை அருகே குடும்ப தகராறில் தம்பியை பாட்டிலால் குத்தி கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை பகுதியில் வசித்து வருபவர் பிரகாசம் (37). கூலி தொலாளி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் அவரது அண்ணன் தமிழ்செல்வனுக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரகாசத்துக்கும், அவரது அண்ணன் தமிழ்செல்வனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

arrest

வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த தமிழ்செல்வன், பாட்டிலால் பிரகாசத்தை குத்தினார். இதில் பலத்த காயமடைந்த பிரகாசத்தை உறவினர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரகாசம் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளி தமிழ்செல்வனை கைது செய்தனர்.