"இடைத்தேர்தலில் யார் வென்றாலும், அது பணநாயகம் வென்றதாகவே கருதப்படும்" - சரஸ்வதி எம்எல்ஏ பேட்டி

 
saraswati

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யார் வென்றாலும் பண நாயகம் வென்றதாகவே கருதப்படும் என மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், பெரியார் நகர், சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி வாக்களித்தார்.

saraswati

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ சரஸ்வதி, இந்த இடைத்தேர்தலில் ஏராளமான பணம், பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதாக பல்வேறு புகார்கள் உள்ளதாகவும்,  இடைத்தேர்தலில் யார் வென்றாலும் பணநாயகம் வென்றதாகவே கருதப்படும் என்றும் கூறினார். பணத்தை கொடுத்து வாக்காளர்களை கவரும் நிலை மாற்றப்பட வேண்டும் என கூறிய சரஸ்வதி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்றும், பணம் வாங்காமல் வாக்களிப்பதற்கான மனநிலைக்கு மக்கள் மாற வேண்டும் என தெரிவித்தார்.