திருவண்ணாமலை அருகே மாடு மேய்க்க சென்ற பெண் அடித்துக்கொலை!

 
murder

திருவண்ணாமலை அருகே மாடு மேய்க்க சென்ற பெண் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்துள்ள அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயி. இவரது மனைவி தாட்சாயிணி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.  ராஜேந்திரன், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள சட்டுவந்தாங்கல் கிராமத்தில்  நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்தார். மேலும், அங்கு மாடுகளையும் வளர்த்து வந்தார். அவற்றை தாட்சாயிணி நாள்தோறும் மேய்ச்சலுக்கு ஓட்டிசென்று விட்டு வீட்டிற்கு திரும்புவது வழக்கம். 

tiruvannamalai

நேற்று முன்தினம் மதியம், தாட்சாயிணி வழக்கம்போல் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ராஜேந்திரன், அவரை தேடிச் சென்றார். அப்போது, அவர்களது விவசாய நிலத்தின் அருகே உள்ள கடலை காட்டில் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் தாட்சாயிணி சடலமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன், இதுகுறித்து பிரம்மதேசம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். 

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாட்சாயிணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தாட்சாயிணி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.