குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை... கணவர், மாமனார் கைது!

 
arrest

திருப்பூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பெண்ணின் கணவர் மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் நவக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரபு(26). பனியன் நிறுவன தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த நந்தினியை(24) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் குன்னத்தூர் ஒருக்காம்பாளையம் பகுதியில் வசித்து வந்தனர்.

tiruppur

மதுப்பழக்கத்திற்கு அடிமையான பிரபு குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கடந்த மாதம் 30 ஆம் தேதி நந்தினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், திருமணமான 5 ஆண்டுகளில் அவர் உயிரிழந்ததால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நந்தினியின் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், இதுகுறித்து கணவர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி நந்தினியின் பெற்றோர் சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, குன்னத்தூர் போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக நந்தியின் கணவர் பிரபு மற்றும் அவரது தந்தை ஆறுமுகம் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.