நெல்லை அருகே தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை - உறவினர் வெறிச்செயல்

 
murder

நெல்லை அருகே முன்விரோதம் காரணமாக கூலி தொழிலாளியை கத்தியால் குத்திக் கொன்ற உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள காக்கரை பகுதியை சேர்ந்தவர் சீனிகுமார்(50). கூலி தொழிலாளி. இவர் வள்ளியூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான சுடலையாண்டி (55) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் சீனிக்குமார், சுடலையாண்டியை தாக்கி உள்ளார். 

nellai

இதனால் ஆத்திரமடைந்த சுடலையாண்டி, சீனிக்குமாரை கொலை செய்ய முடிவெடுத்தார். இதனிடையே, தீபாவளி பண்டிகைக்காக சீனிக்குமார், தனது சொந்த ஊரான காக்கரை கிராமத்துக்கு சென்றிருந்தார். இதனை அறிந்த சுடலையாண்டி நேற்று காக்கரை பகுதிக்கு சென்று அங்கிருந்த சீனிகுமாரை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், சுடலையாண்டி அங்கிருந்து ஆட்டோவில் தப்பியோடினார். 

இதுகுறித்து தகவல் அறிந்த ராதாபுரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீனிகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராதாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சுடலையாண்டியை தீவிரமாக தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தத பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.