திருச்செங்கோடு அருகே தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை!

 
murder

திருச்செங்கோடு அருகே தைப்பூச திருவிழாவின்போது ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த பருத்திப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் உமாசங்கர்(28). இவர் சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள லாரி பட்டறையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு சிவ அம்பிகை என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், பருத்திப்பள்ளி கிராமத்தில் உள்ள கந்தசாமி கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.  உமாசங்கர் போட்டியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த கோபி என்பவர் மதுபோதையில் உமாசங்கரிடம் தகராறு செய்துள்ளார். 

namakkal

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த கோபி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உமாசங்கரை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த உமாசங்கரை உறவினர்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைகக்கு கொண்டு செல்லப்பட்டார்.  எனினும் சிகிச்சை பலனின்றி உமாசங்கர் உயிரிழந்தார்.

தகவல் அறிந்த மல்லசமுத்திரம் போலீசார், உமாசங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து உமாசங்கரின் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளி கோபியை கைது செய்தனர். தைப்பூச திருவிழாவின்போது ஏற்பட்ட மோதலில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.