திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை... கிருஷ்ணகிரி அருகே சோகம்!
கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த 8 மாதத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள முருங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவர் ஷோபா (19) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இதனை அறிந்த ஷோபாவின் பெற்றோர், அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பையும் மீறி ஷோபா, தமிழரசனை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஷோபாவின் பெற்றோர், அவருடன் பேசாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் மன வேதனையில் இருந்து வந்த ஷோபா, கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் ஷோபா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருணமாகி 8 மாதத்தில் ஷோபா தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டு வருகிறார்.