திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - கோட்டாட்சியர் விசாரணை!
தேனி மாவட்டம் கம்பம் அருகே திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் தாமரைசெல்வம். இவரது மனைவி சித்ரா(26). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 1 வயதில் லத்திகா என்ற பெண் குழந்தை உள்ளது. இதனிடையே, குடும்ப தகராறு காரணமாக சித்ரா கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார். மேலும், அவர் வாழ்க்கையில் விரக்தியடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று, சித்ராவின் தாயார் கடைக்கு சென்றிருந்த போது, வீட்டில் தனியாக இருந்த சித்ரா, குழந்தையின் தொட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்கு திரும்பிய சித்ராவின் தாயார் மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியில் கதறி துடித்தார். இதனை அடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சித்ராவை மிட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சித்ரா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.
தகவலின் பேரில் கூடலூர் தெற்கு போலீசார் உடலை கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சித்ராவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமாகி 2 ஆண்டுகளில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் கெளசல்யா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


