13 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் கைது!
பொள்ளாச்சி அருகே 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த கட்டிட தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி புரவிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாரதி கண்ணன்(20). இவர் கட்டிட தொழிலாளி ஆக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், பாரதி கண்ணனுக்கு, பொள்ளாச்சியை சேர்ந்த 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இது நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிகண்ணன், சிறுமியை அழைத்துச் சென்று அருகில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனை அறிந்த சிறுமியின் உறவினர்கள், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமிக்கு 13 வயது ஆவதும், பாரதிகண்ணன் அவரை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ததுடன், பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிவந்தது. இதனை அடுத்து, அவர் மீது குழந்தை திருமணம் தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.