கோவையில் இளைஞர் வெட்டி படுகொலை - 6 பேர் கும்பல் வெறிச்செயல்!

 
murder

கோவையில் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த விஜயன் என்பவரது மகன் ஸ்ரீராம் என்கிற குரங்கு ஸ்ரீராம் (22). இவர் நேற்றிரவு 9 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த நண்பர் கவாஸ்கான் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகர் அருகே சென்றபோது ஸ்ரீராமின் வாகனத்தை, 3 இருசக்கர வாகனங்களில் 6 பேர் கும்பல் வழிமறித்து அரிவாள்,கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்களை தாக்க முயன்றது. இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீராம் மற்றும் கவாஸ்கான் ஆகியோர் அவர்களிடம் இருந்து வாகனத்தில் தப்பிச்செல்ல முயன்றனர். 

police

எனினும் அவர்களை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு விரட்டிச் சென்ற அந்த கும்பல், அங்குள்ள கோழிக்கடையில் ஸ்ரீராமை மடக்கிப்பிடித்து சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். தகவல் அறிந்த கோவை தெற்கு துணை ஆணையர் உமா தலைமையில் காவல் ஆய்வாளர்கள் செந்தில்குமார், முத்தமிழ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ரத்தினபுரி மற்றும் கண்ணப்பன் நகரை சேர்ந்த குழுக்கள் இடையே இருந்து வந்த முன்விரோதம் காரணமாக ஸ்ரீராம் வெட்டிக்கொல்லப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்ப்டட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.