ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை... கம்பத்தில் சோகம்!

 
suicide

தேனி மாவட்டம் கம்பத்தில் ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காக்கில் சிக்கையன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களது இளைய மகன் ஹரிஹரன்(23). பட்டதாரியான இவர் கம்பத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து, கூடலூர் பகுதியில் உள்ள ராணுவ தேர்வுக்கான பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். 

cumbum

இந்த நிலையில், ராணுவத்தில் சில பிரிவுகளில் சேருவதற்கான வயது வரம்பு குறைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனை அறிந்த ஹரிஹரன் தனக்கு 23 வயது முடிந்துவிட்டதால் தன்னால் ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க முடியாது என வேதனை அடைந்துள்ளார். மேலும், மனமுடைந்து காணப்பட்ட அவர் சம்பவத்தன்று தனது உறவினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தகவலின் பேரில் கம்பம் தெற்கு போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.