முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை... தந்தை, மகன் உள்பட 5 பேர் கைது!
ராணிப்பேட்டை அருகே முன் விரோதம் காரணமாக பொக்லைன் ஓட்டுநர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள மகேந்திரவாடி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (23). இவர் பொக்லைன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேருந்து மோதிய விபத்தில் சக்திவேலின் கால் ஊனமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக பேருந்தை ஓட்டிய அதே கிராமத்தை சேர்ந்த ஓட்டுநர் தினேஷ் என்பவருடன் சக்திவேலுக்கு முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சக்திவேல், தனது பொக்லைன் இயந்திரத்தை ஓட்டிச்சென்று தினேஷின் வீட்டை இடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த தினேஷ், அவரது தந்தை அருள் உள்ளிட்டோர், பொக்லைன் ஓட்டுநர் சக்திவேலை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், பலத்த காயமடைந்த சக்திவேலை அருகில் இருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சக்திவேல் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் தினேஷ், அவரது தந்தை அருள், நந்தகுமார்(38) உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.