சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதிய கார் - 12 பேர் பலி

 
Karnataka accident

கர்நாடகாவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சிமெண்ட் கலவை லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயம் அடைந்தனர். 

ஆந்திர மாநிலம் கோரெண்ட்லா பகுதியை சேர்ந்த சிலர் டாடா சுமோ காரில் கர்நாடகாவின் சிக்கபள்ளபுரா பகுதியில் சென்றுகொண்டிருந்தனர். அதிகாலை நேரம் என்பதால் அந்த பகுதியில் கடுமையான பனிமூட்டம் நிலவியதாக கூறப்படுகிறது. இதனால் ஓட்டுநருக்கு சாலை சரிவர தெரியாத நிலையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சிமெண்ட் கலவை லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவருகளுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  சிமெண்ட் கலவை லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.