ஜார்க்கண்ட் மாநில தீ விபத்தில் 14 பேர் பலி.. பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு..
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிட்டம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 14 பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதால் உயிர் இழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் ஆசிர்வத் டவர் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 5வது தலத்தில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து, அடுத்தடுத்து 6ம் மற்றும் 7ம் தலங்களுக்கு பரவியது. இதனையடுத்து தகவலறிந்து 40 தீயணப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடினர். எனினும் இந்த தீ விபத்தில் சிக்கி 3 குழந்தைகள், 10 பெண்கள் உள்பட 14 பேர் உயிர் இழந்துள்ளனர்.
மேலும், கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்ட பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் அதிக காயங்களுடன் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. வேறு யாரேனும் வீடுகளுக்குள் சிக்கி உள்ளார்களா என மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்தோர்க்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம், காயம் அடைத்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னதாக மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “மீட்புப்பணிகளை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. மீட்புப்பணிகளை நேரடியாக நான் கவனித்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.