கோர விபத்து...கார் மீது மோதிய டிரக்....2 குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக பலி!

 
accident

சத்தீஷ்கர் மாநிலத்தில் கார் மீது டிரக் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

சத்தீஷ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்தில் உள்ள சோரம்-பட்கான் கிராமத்தை சேர்ந்த சிலர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று இரவு கன்கேர் மாவட்டத்தின் மார்கடோலா கிராமத்திற்கு ஒரு காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். அந்த காரில் 10க்கும் மேற்பட்டோர் பயணித்ததாக கூறப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை 30-ல் புரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜக்தாரா கிராமத்திற்கு அருகே அவர்களது கார் சென்றுகொண்டிருந்த போது, எதிரே வந்துகொண்டிருந்த டிரக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார் மோது அதிவேகத்தில் மோதியது.  


இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், அதில் பயணித்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.  இந்த விபத்தில் காரில் இருந்த பத்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு குழந்தை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய டிரக் ஓட்டுநரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.