இந்தியாவில் புதிதாக 20,279 பேருக்கு கொரோனா..
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 36 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், அண்மைக்காலமாக மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும் பாதிப்பு குறைந்தபாடில்லை.. பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கடைப்பிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,279 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 4,38,88,755 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 94,420 ஆக உள்ளது. அதேநேரம் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 033ஆக அதிகரித்துள்ளது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 18,143 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 10 ஆயிரத்து 522ஆக அதிகரித்திருக்கிறது.
மேலும், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 28,83,489 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 200 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 202 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.