ஸ்ரீஹரிகோட்டா ஆராய்ச்சி மையத்தில் 248 பேருக்கு பாசிட்டிவ்... தள்ளிப்போகிறதா ககன்யான் திட்டம்!
இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா விஸ்வரூபம் எடுத்துள்ளது. தொற்று எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் ஆந்திராவில் மூன்றாம் அலை கொஞ்சம் தாமதமாகவே ஆரம்பித்தது. எனினும் முன்னெச்சரிக்கையாக தியேட்டர்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தது.
அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஜனவரி 23ஆம் தேதிக்கு பிறகு ஆந்திராவில் தொற்று எண்ணிக்கை உச்சத்திற்குச் செல்லக் கூடும் என மத்திய சுகாதார துறை எச்சரித்திருந்தது. இச்சூழலில் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலுள்ள விஞ்ஞானிகள், பணியாளர்கள் அநேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 248 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மையத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் பொங்கல் பண்டிகையையொட்டி அவரவர் சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். இவர்கள் சமீபத்தில் தான் ஸ்ரீஹரிகோட்டா திரும்பினார்கள். அவ்வாறு வந்தவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அந்த வகையில் நேற்று முன்தினம் 96 பேருக்கு தொற்று உறுதியானது. தற்போது மேலும் 152 பேருக்கு தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த மாத இறுதியில் விண்வெளியில் செலுத்தப்பட இருந்த ஜி.பி.எஸ். தொழில்நுட்ப செயற்கைக்கோள் மற்றும் ககன்யான் திட்டப்பணிகள் கால தாமதம் ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.