2வது முறையாக வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு : ரிசர்வ் வங்கி அறிவிப்பு..
நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது,.
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் மும்பையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிவிப்பை இன்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் வெளியிட்டார். ஏற்கனவே கடன்களுக்கான வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி 25 முதல் 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடன்களுக்கான வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்த ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போது கடனுக்கான வட்டி விகிதம் 4.40 சதவீதமாக இருக்கும் நிலையில் நிதிக்கொள்கை கூட்டத்தில் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டதால், வட்டி விகிதம் 4.90 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் வங்கிகளில் வீடு, வாகனம், தனிநபர் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த மே மதம் நடைபெற்ற நாணய கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.40 சதவீதம் அதிகரித்து 4.40 சதவீதமாக உயர்த்தியது. இதனால் ஏற்கனவே வங்கி கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ள நிலையில், மீண்டும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களை கலக்கமடையச் செய்துள்ளது.
2022-23ம் நிதியாண்டில் பணவீக்க விகிதம் 6.7%ஆக அதிகரிக்கும் எனவும், அதேபோல் 2022 -23 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.2%ஆக இருக்கும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தொடர்ந்து நிலைத்து நிற்கும் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி உறுதுணையாக இருக்கும் என்று ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்ததாஸ் கூறினார்.