மணிப்பூரில் மீண்டும் தலைதூக்கிய வன்முறை - 3 இளைஞர்கள் சுட்டுக் கொலை!

 
manipur

மணிப்பூர் மாநிலத்தில் இன்று அதிகாலை மீண்டும் வன்முறை ஏற்பட்ட நிலையில், இதில் குகி சமூகத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். 

மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடியின சமூகத்திற்கும், மெய்தி இன மக்களுக்கும் கடந்த மே மாதம் முதலே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த மோதல் வன்முறையாக மாறிய நிலையில், அந்த மாநிலமே போர்க்களமாக காட்சி அளித்து வருகிறது. வன்முறையால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காயம அடைந்துள்ளனர். ஏராளமான பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்த நிலையில், அது தோல்வியில் முடிந்தது.

manipur

இந்த நிலையில், மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், இதில் 3 இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். உக்ருல் மாவட்டத்தில் உள்ள குகி தேவாய் கிராமத்தில், மெய்தி இன இளைஞர்களுக்கும், குகி பழங்குடியின இளைஞர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் குகி சமூகத்தை  சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.