பீகார் அமைச்சரவை விரிவாக்கம் - 31 அமைச்சர்கள் பதவியேற்பு
பீகார் மாநில அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்ற நிலையில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஆர்ஜேடி கட்சியை சேர்ந்த மொத்தம் 31 அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர்.
பீகார் மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்று இருந்த நிலையில் அந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து பீகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்த நிதிஷ் குமார் அம்மாநிலத்தின் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இதேபோல் துணை முதலமைச்சராக ஆர்.ஜே.டி கட்சியை சேர்ந்த தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், பாட்னாவிலுள்ள ஆளுநர் மாளிகையில் இன்று அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. இதில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தேஜ் பிரதாப் யாதவ் உள்பட 31 பேர் பீகார் மாநிலத்தின் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு அம்மாநில ஆளுநர் பகு சௌஹான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.