இந்தியாவில் 45 லட்சம் பேர் கொரொனாவுக்கு பலி??.. உலக சுகாதார அமைப்புக்கு மத்திய அரசு கடும் கண்டனம்..
இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை அதிகப்படுத்தி அறிக்கை வெளியிட்டதற்காக உலக சுகாதார அமைப்புக்கு , மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுல் மாண்டவியா கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
உலக சுகாதார அமைப்பு (WHO) கடந்த சில மாதங்களுகு முன்னர் இந்தியாவில் கொரோனாவுக்கு 45 லட்சம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அறிக்கை வெளியிட்டுருந்தது. இதற்கு அப்போதே மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்கள் தொடர்ந்து கண்டனக் குரலை பதிவு செய்து வருகின்றன. ஏற்கனவே குஜராத்தில் நடைபெற்ற மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களின் 14வது கவுன்சில் மாநாட்டில் இதுகுறித்து பேசியிருந்த மத்திய அமைச்சர் மன்சுவிக் மாண்டவியா, இந்தியாவை குறைத்து மதிப்பிடுவதே இந்த அறிக்கையின் நோக்கம் என விமர்சித்திருந்தார்.
மேலும் , சட்டவிதிமுறைகளை பின்பற்றி முறையாகவும், வெளிப்படையாகவும் கொரோனா இறப்புகளை மாநிலங்கள் பதிவு செய்வதாகவும் கூறி கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையில் உலக சுகாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்தியாவில் 45 லட்சம் பேர் வரை கொரோனாவால் உயிரிழந்து இருக்கலாம் என அறிக்கை வெளியிட்டு இருப்பது வருத்தம் அளிப்பதாக கூறினார்.
மேலும், இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் உள்ள 23 மாநில சுகாதார அமைச்சர்கள் ஒன்றாக சேர்ந்து உலக சுகாதார அமைப்பின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்ததையும் சுட்டிக்காட்டினார். மேலும் இந்திய அரசு சட்டப்படி, உருவாகிய வலுவான மற்றும் துல்லியமான தகவல்களை உலக சுகாதார நிறுவனம் மதித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், தனியார் அமைப்புகளின் துல்லியமற்ற தகவல்களை நம்பக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். இருந்தபோதிலும், உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரத்துறை தொழில்நுட்ப இயக்குனர் வில்லியம், கிடைத்துள்ள தரவுகளின் படி இந்தியாவில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகவே தெரிவித்தார்.