ஜம்மு-காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

 
kashmir

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் இடையே ஏற்பட்ட துப்பாகிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். 

ஜம்மு-காஷ்மீரில் தற்போது கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்த குளிரை பயன்படுத்தி பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை பாதுகாப்பு படை வீரர்களை எச்சரித்து இருந்தது. இதனையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், குல்காம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து அந்த பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படைவீரர்கள் அந்த வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திடீரென பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படை வீரர்களும்  துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருதரப்பினரிடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். அவர்கள் 5 பேரும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.