அசாமில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 8 பேர் உயிரிழப்பு..

 
Japanese Encephalitis


அசாமில் பரவி வரும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால், கடந்த 9 நாட்களில்  8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும்  ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் மலேரியா  போன்ற  நோய் தொற்று பாதிப்பால்,   பல உயிர்கள்  பலியாகி வருகிறது. அதிலும்  குறிப்பாக, மழைக்காலங்களில் வேகமாக பரவும் இந்த காய்ச்சல் மே மாதத்தில் தொடங்கி அக்டோர் மாதம் வரை தொடர்கிறது.  இந்த ஆண்டு அசாமில் வரலாறு காணாத அளவிற்கு பருவமழை கொட்டித்தீர்த்துள்ளது.  24 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.  சுமார் 54 லட்சம்  மக்கள்  கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதுவரை 100க்கும் மேற்பட்டோர்   அசாமில் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

அசாம் வெள்ளம்

 ஏற்கனவே வெள்ளத்தால்  மக்கள் ஒருபுறம் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில்,  அசாமில்  ஜப்பானிய மூளைக்காய்ச்சலால்  கடந்த 9 நாட்களில் மட்டும்  8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 82 பேர்  ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய சுகாதார இயக்கம் தெரிவித்திருக்கிறது.  இந்நிலையில்,  மாவட்ட விரைவுப் பதில் குழுக்களை அமைக்கவும்,  காய்ச்சல் நிலைமையை  உன்னிப்பாகக் கண்காணிக்கவும் மாவட்ட அதிகாரிகளுக்கு  சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.  

இதனையடுத்து நேற்று   மாவட்ட அதிகாரிகளுடன் காணொலி மூலம்  அசாம் மாநில சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர் அவினாஷ் ஜோஷி  மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குனர் டாக்டர் எம்.எஸ்.லட்சுமி பிரியா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.  மேலும்  நிலைமையை சமாளிக்க வரும் 16ம் தேதிக்குள் மாவட்ட விரைவுப் பதில் குழுவை அமைக்குமாறும் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.