தீவிரமடையும் 3ஆம் அலை.. 875 நாடாளுமன்ற ஊழியர்களுக்கு பாசிட்டிவ் - அச்சத்தில் டெல்லி!
இந்தியா முழுவதும் கொரோனா மூன்றாம் அலை பரவி வருகிறது. முதல் இரண்டு அலைகளைக் காட்டிலும் மூன்றாம் அலையில் அதிவேகமாக கொரோனா தாக்குகிறது. அந்த இரு அலைகளை விட மூன்றாம் அலையில் தினசரி கொரோனா பாதிப்புகள் 23 சதவீதத்திற்கும் அதிகமாகப் பதிவாகின்றன. நல்ல வேலையாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் தொற்று எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இல்லையெனில் இதை விட அபரிமிதமாக தொற்று எண்ணிக்கை உயர்ந்திருக்க கூடும்.
அதேபோல பல்வேறு மாநிலங்களில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு, அதிகப்படியான கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொரோனா பரவலையொட்டி பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவைகள் கூட்டப்படவில்லை. தமிழ்நாட்டில் கூட்டத்தொடர் தொடங்கினாலும் மூன்றே நாட்களில் முடிவடைந்தது. இச்சூழலில் நாடாளுமன்றத்தில் ஜனவரி 31ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கிறது. பிப்ரவரியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையொட்டி நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஜனவரி 20ஆம் தேதி வரை 2 ஆயிரத்து 847 ஊழியர்களுக்கு கொரொனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதில் இதுவரை 875 ஊழியர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு ஒமைக்ரானா என கண்டறிய மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவர்களில் 271 பேர் மாநிலங்களவையில் பணிபுரிபவர்கள். எஞ்சியவர்கள் மக்களவையிலும் இரு அவைகளிலும் பணிபுரிபவர்கள். நேற்று குடியரசு துணை தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடுவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.